வல்லூறுகளைப் பாதுகாக்க உதவும் தோல் பாவைக் கூத்துக் கலைஞர்


Lakshman Rao displays his leather puppets, some of which are hand painted by his grandfather hundreds of years ago

(Image courtesy: http://www.maduraimessenger.org)

வல்லூறுகளைப் பாதுகாக்க உதவும் தோல் பாவைக் கூத்துக் கலைஞர்

தென்னிந்தியாவில் நாட்டுப் புறக்கலைகளில் நாம் பெரிதும் அறிந்தவை தெருக்கூத்து மற்றும் பொம்மலாட்டம். தெருக்கூத்தில் பாடல்களாலான கதை சொல்லும் முறையை நாம் காண்கிறோம். புராணக் கதைகளை நாம் தெருக்கூத்தில் தொன்று தொட்டு நாட்டிய நாடக வடிவில் பார்க்கிறோம். முத்துசாமி தமிழகத்தைப் பொருத்த அளவில் கூத்துப்பட்டறை என்னும் அமைப்பின் மூலம் அதற்கு புத்துயிர் அளித்தது மட்டுமன்றி சமகாலத்தில் சமூக விழிப்புணர்வு தேவைப்படும் பல செய்திகளை புராணப் பின்னணியில் மக்களுக்கு வழங்கினார். பொம்மலாட்டம் என்பது சிறிய பொம்மைகளை மிகவும் திறமையும் கலைநுட்பமும் கொண்ட விரலசைவுகளால் இயக்கி நம்மை ஒரு நாடகம் பார்க்கும் உண்ர்வுக்கு இட்டுச் செல்லும் அறிய கலையாகும். திரைக்குப் பின்னே உயரத்தில் இருந்து நூல்களை இயக்கும் கலைஞர் தென்படமாட்டார். பொம்மைகளும் நூல் இழைகள் மட்டுமே தென்படும்.

பாவைக் கூத்து என்பது இதை விட நுட்பமான ஒன்று மெல்லிய திரைக்குப் பின்னாலே திரை மீது விழும் வெளிச்சத்தின் ஊடாகப் பனை ஓலைகளால் செய்யப் பட்ட வடிவங்களின் வெவ்வேறு பகுதிகள் மெல்லிய மூங்கில் பட்டைகளோடு இணைக்கப் பட்டிருக்கும். விசிறி போல அதன் அடிப்பக்கமே கலைஞரது கையில் இருக்கும். அவரது கையசைவு கைகள் மீது வெளிச்சம் விழாததால் தென்படாது. ஓலை வடிவ உருவங்கள் அசையும் போது பாட்டின் வழியாக நாம் கதையை, உரையாடலை புரிந்து கொண்டு ரசிப்போம். (தசாவதாரம் என்னும் தமிழ் சினிமாவில் இது வணிக ரீதியாகப் பயன்படுத்தப் பட்டுக் காட்டப் பட்டது) பனை ஓலை வடிவங்களுக்குப் பதிலாகத் தோலினால் ஆன வடிவங்களைப் பயன்படுத்தும் கலை “தோல் பாவைக் கூத்து”. இதில் பறவைகள், விலங்குகளின் வடிவத்தைக் காட்டுவது பனை ஓலையில் செய்ததை விட இன்னும் ரசிப்புக்கு உரியதாகவும் அசல் உருவங்களின் மிக நெருங்கிய நகல்களாகவும் இருக்கும்.

நாகர்கோவிலைச் சேர்ந்த லட்சுமண ராவ் பாரம்பரியமான இந்தக் கலையைத் தம் தாத்தாவிடமிருந்து கற்றார். புராணக் கதைகளை சொல்லும் முறையில் தான் அவருக்குப் பயிற்சி உண்டு. ஆனால் இன்றைய மிகப் பெரிய சவாலான பசுமை காக்கும் பணிக்காக, வல்லூறுகளைக் காக்கும் விழிப்புணர்வை மையப்படுத்தி அவர் ஒர் தோல் பாவைக் கூத்தை, அருளகம் என்னும் தன்னார்வ நிறுவனத்துக்காக அளித்தார். ஏறத்தாழ 19 நூற்றாண்டுகளுக்கும் மேல் பழமையான இந்தக் கலையைக் காப்பதில் வருமானமோ ஆதரவோ எதுவும் இல்லாமலேயே இவர் இயங்கி வருகிறார். நாட்டுப் புறக் கலைகள் நசிந்து போனதுக்குத் தொலைக்காட்சி காரணம் என்பது மிகவும் மேலோட்டமான வாதம். தொலைக்காட்சியில் கலைகளுக்கு என்று ஒரு இடமில்லை. இசை, நாட்டியம், நாட்டுப்புறக் கலைகள் எவற்றுக்குமே இடம் இல்லை. தமிழ் நாட்டின் கலை மற்றும் இலக்கியச் சூழலில் இயங்குபவர்கள் குழுக்களாகவும் குறுகிய நோக்கின் அடிப்படையிலான இலக்குகளைத் துரத்துபவர்களாகவும் இருப்பதே காரணம். வணிக ரீதியான சினிமா மற்றும் தொலைக்காட்சி வியாபாரக் கும்பலுக்கு இந்த மனப்பானமையை வைத்து இவர்களைத் தேவைப் படும் போது பயன்படுத்திக் கொள்வதற்குத் தோதாக இருக்கிறது.. லட்சுமண ராவின் ஒரு பேட்டி தொலைக்காட்சியில் வருவது பெரிய சவால். திரைப் படம் சம்பந்தப் பட்ட யாரவது ஒருவருக்கு அது மிகவும் அண்மையானது. (News Courtesy: TOI, Image courtesy:http://www.maduraimessenger.org)

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

கண்ணாமூச்சி


கண்ணாமூச்சி

ஆழ்மன அடுக்குகளில்
நெருடும்
வடுக்களா

பிரமைகளா அனுமானங்களா
அன்னிய முகச் சலனங்கள்
விட்டுச் சென்ற தடங்களா

ஏதோ ஒன்று
வலி வலிமையாகக்
காரணம்

தற்காலிகமாகத் தவிர்க்கலாம்
தப்பிக்க முடியாது
என்பதே வலியின் அச்சுறுத்தல்

எனது உனது என
இரண்டு வலிகள்
ஏவாள் காலத்திலிருந்து

என் மீட்பராகவே
இருப்பது உனக்கு
வலி மிகுந்ததானது

காத்திருந்து கால்
மரத்துப் போன போது
வலியுடன் சமரசமானது

நிரந்தர விடுதலை
மரணமாயிருக்கலாம்

அவ்வப் போதான விடுதலை
மௌனமாயிருக்கலாம்

சொற்களும் மௌனமும்
விளையாடும்
கண்ணாமூச்சியிலும்

(Image courtesy:blogs.psychcentral.com)

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20


Buddha_in_Sarnath_Museum_(Dhammajak_Mutra)

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20

சத்யானந்தன்

Share

பிம்பிசாரரின் எதிரே கலா உதாயின் வணங்கி நின்றிருந்தார். “நீங்கள் சொல்வது யாவும் எனக்குப் புரிகின்றன உதாயின். ஆனால் கௌதம புத்தர், மன்னர் பிம்பிசாரர் கருதுவது போலத் தங்கள் பாலிய சினேகிதராக இல்லை. கஸ்ஸாபா பழங்குடியினர் அக்கினி தேவனைத் தவிர வேறு யாரையும் ஏற்காதவர்கள். அவர்களே தங்களது தலைவர்களான கஸ்ஸாபா சகோதரர்களுடன் பௌத்தத்தில் இணைந்திருக்கிறார்கள்”

“சிறியவனுடைய பேச்சு அதிகப்பிரசங்கமாக இருந்தால் மன்னிக்கவும். பெற்ற தாயையும் தந்தையையும், நம்பி வந்த மனைவியையும் தான் பெற்ற மகனையும், பிறந்த மண்ணையும் விடவா ஞானமும் துறவும் உயர்ந்தவை?”

‘சாக்கிய நாட்டின் ஒரு சாதாரண சேவகராகத் தாங்கள் பேசவில்லை. சுத்தோதனரின், கபிலவாஸ்து மக்களின் குரலாக இதைக் கூறுகிறீர்கள் என்பதை உணர்கிறேன். புத்தர் உங்கள் மண்ணுக்கு உங்க்ள் வேண்டுகோளை ஏற்று கபிலவாஸ்துவுக்குத் திரும்பினால் அது சுத்தோதனரின் மன நிம்மதிக்கு வழி வகுக்கும். ஆனால் மகதம் அவரைப் பிரிய வேண்டியது தான். மகதம் செய்த பாக்கியம் அவர் இங்கே ஞானம் பெற்றது”

“நன்றி மகாரஜா. தாங்கள் அழைப்பை தூதுவர் மூலம் அனுப்புங்கள். புத்தர் இங்கே வரட்டும். தாங்களும் பணிவுடன் நானும் அவரிடம் பேசினால் அவரிடம் மனமாற்றம் ஏற்படலாம் இல்லையா?”

” அது முறையல்ல உதாயின். புத்தர் சித்தார்த்தராக இங்கே வரவில்லை.பூரண ஞானம் பெற்றவராக மகதமே ஏற்கும் மகானாக வந்திருக்கிறார். நாளை பல தேசங்களும் ஏன் மனித குலமே வணங்க இருக்கும் அவரை நான் இங்கே வரச்சொல்லித் தூதுவரை அனுப்புவது முறையாக இருக்காது. ராஜகஹத்துக்கு வெளியே ஒரு பனந் தோப்பில் அவரும் அவரது சீடர்களும் தங்கி இருக்கின்றனர். அங்கே நாம் சென்று அவரை வணங்கி சுத்தோதனரின் செய்தியைத் தெரிவிப்பதே முறை”

சங்கு முழங்கியது. உயர்ந்து வளைந்திருந்த மரக்குழல் வாத்தியமும் முழங்கியது. “மன்னர் பிம்பிசாரர் வாழ்க” என்னும் கோஷங்களுக்கிடையே நான்கு குதிரைகள் பூட்டிய மிகப் பெரிய ரதத்தில் பிம்பிசாரர் கிளம்பினார். பின்னால் குதிரைப் படை வீரர்கள். அவர்களைத் தொடர்ந்து கபிலவாஸ்து மந்திரிகளில் ஒருவரும் கலா உதாயினும் ஒரு ரதத்தில் அமர்ந்து வந்தனர். அவர்கள் இருவருடன் வந்திருந்த பொது மக்களும் படை வீரர்களும் கால் நடையாகப் பின் தொடர்ந்தனர்.

ஒரு கட்டிலின் மேற் பகுதி மூங்கிற் சட்டங்களால் நெருக்கிப் பின்ன்பட்டிருந்தது மையப் பகுதி. அதன் மேல் போர்த்தியிருந்த வெள்ளைத் துணி அந்தக் கட்டிலின் கால்களை மறைத்துத் தரையைத் தொட்டபடி இருந்தது. அது புத்தருக்காகக் காத்திருந்தது.

அதற்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்தார் பிம்பிசாரர். தரையில் உட்கார்ந்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுள், முன் வரிசையில் கலா உதாயின் மற்றும் கஸ்ஸாபா சகோதரர்கள். பனை ஓலைகள் அசையும் சத்தம் மற்றும் தூரத்தில் ஆடு மாடுகள் மேயும் சத்தம் தவிர அந்த இடம் பூரண அமைதியில் இருந்தது.

சிறிது நேரத்தில் புத்தரும் அவருடைய சீடர்களும் பிட்சை ஏற்றபின் அந்த மூங்கில் வனத்துக்கு திரும்புவதைக் கண்ட மக்களிடையே சிறு சலசலப்பு. பிம்பிசாரரும் மக்கள் அனைவரும் புத்தர் கூட்டத்தைத் தாண்டிப் பின்னே வனத்துக்கு உட்புறம் செல்லும் வரை எழுந்து நின்று வணங்கினர். புத்தரும் சீடர்களும் வனத்தில் வட்டமாக அமர்ந்து பிட்சையாக ஏற்று வந்த உணவை உண்டனர்.

புத்தர் உணவு முடித்து அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்டிலில் வந்து அமர வந்ததும் பிம்பிசாரரும் மற்ற அனைவரும் எழுந்து நின்று அவரை வணங்கினர். புத்தர் கைகூப்பி வணங்கி அமர்ந்தார்.

“நம்முடன் அமர்ந்து சிறப்பித்திருக்கும் மகாராஜா பிம்பிசாரருக்கு நன்றி” என புத்தர் பேசத் துவங்கினார்.

‘ஞானம் தேடி அலைந்த போது நான் ராஜகஹத்தில் மாமன்னரை சந்தித்தேன். ஞானம் பெற்றால் மன்னர்களில் முதலில் மன்னர் பிம்பிசாரரையே சந்திப்பேன். இந்த நகருக்கே வருவேன் என வாக்களித்தேன். அது இன்று பூர்த்தியாகி விட்டது. பௌத்தம் என்னும் மார்க்கமாக என் வழி அறியப்பட்ட பின்பு கூடும் முதல் சபை இது. நீங்கள் எல்லோரும் என் பேச்சைக் கேட்கத்தானே வந்திருக்கிறீர்கள்?”

முதலில் யாரும் பதில் பேசவில்லை. ஓரிரு நொடிகள் கடந்தன. “ஆம் புத்த தேவரே” என்றாள் சுஜாதா. ” ஆம் சித்தார்த்தரே” என்றான் கலா உதாயின். உருவேலா கஸ்ஸாபா சினந்து “அவரை அவ்வாறு அழைப்பது மரியாதையில்லை” என்றான்.

“பரவாயில்லை உருவேலா” என்ற புத்தர் “நானோ நீங்கள் பேசுவதைக் கேட்ட பிறகே நானும் பேசலாம் என்று எண்ணி வந்திருக்கிறேன்” என்று “உங்களுள் துக்கம் அனுபவிக்காதவர் யாரேனும் இருக்கிறீர்களா?” என்றார். யாரும் பதில் பேசவில்லை.

சற்று நேரம் காத்திருந்து தொடர்ந்தார் புத்தர் ” நாம் அனைவரும் நிறையவே துன்பம் அனுபவித்து விட்டோம். அதுவே நம் வாழ்க்கையின் கசப்பான பகுதி. துன்பம் எது, எந்த வகைப் பட்டது என்பதை நீங்கள் முதலில் கூறுங்கள். யார் வேண்டுமானாலும் தாங்கவே இயலாத துன்பம் அவர் கருத்தில் என்ன என்பதைக் கூறுங்கள்”

‘திருமணமான ஒரு பெண்ணுக்குப் பிள்ளைப் பேற்றில் தாமதமும், ஒரு கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் ஆவதில் ஏற்படும் தடைகளுமே மிகவும் துக்ககரமானவை’ என்றாள் சுஜாதா.

கலா உதாயின் “தனது மகன் இல் வாழ்க்கையைத் துறந்து ஞானமார்க்கத்தில் செல்லும் போது அந்தத் தந்தைக்கும், ம்றுபக்கம் அவனது மனைவி குழந்தைகளுக்கும் ஏற்படும் ஏமாற்றமும், பிரிவுத் துன்பமுமே மிகவும் வருத்தமான துன்பங்கள்” என்றான்.

‘மழை பொய்த்து விளைச்சலைக் காண முடியாது, தன் விவசாயப் பணிகளை நிறுத்தும் கட்டாயம் ஏற்படுவதே மிகவும் துக்கம்” இது ஒரு விவசாயியின் பதில்.

“தனது குழந்தை அகால மரணமடைவதே பெரிய துக்கம்” இது ஒரு தாயின் பதில்.

“நோயும் முதுமையுமே துக்கமானவை” என்றார் ஒரு முதியவர்.

“கள்வர்களிடம் நான் உழைத்து ஈட்டிய பொருட்களைப் பறிகொடுப்பதே துக்கம்” என்றார் ஒரு வியாபாரி.

“ஊர் உறவு தவறான கருத்தில் செய்யாத குற்றத்தைக் கூறி அவமானப் படுத்துவதே துக்கம்” இது ஒரு நடுவயதுக்காரரின் கூற்று.

தொடர்ந்து வேறு யாரும் பேசாத போது புத்தர் தம் உரையைத் துவங்கினார்:

“நமது சகோதர சகோதர சகோதரிகள் குறிப்பிட்ட துன்பங்கள் நம்மில் யாரேனும் ஒருவருக்கு தினமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தனது குழந்தையை அகாலமாய்ப் பறி கொடுப்பதைப் பற்றி ஒரு தாய் குறிப்பிட்டார். அது மட்டுமல்ல. தனது நோயோ வலியோ தரும் துன்பத்தை விட, குழந்தை நோயுறும் போதோ வேறு துன்பத்தை எதிர் கொள்ளும் போதோ தாய் தந்தையரின் மனம் மிகவும் வருத்தமடைகிறது. தானும், தன் குடும்பமும் பொருளும் சுகமுமாக இருக்க வேண்டும் என்னும் விருப்பம் நமக்கு எப்போது இருக்கிறது. அது நிறைவேறாத போதோ, அல்லது ஒரு சுகமோ ஒரு பொருளோ தனக்கோ தன் குடும்பத்துக்கோ பறி போகும் போது – அதுவும் வருத்தத்தையே தருகிறது.

விரும்புவதும், விரும்பியது கிடைக்குமா, இருப்பது நிலைக்குமா, எப்போதுமே விருப்பம் நிறைவேறும் நலம் தொடருமா என்னும் கேள்விகள் துரத்திக் கொண்டே இருக்கின்றன.

இன்பமோ துன்பமோ நிலையானதில்லை, வாழ்க்கை என்பது நிலையானதில்லை என்பதை ஏறுக்கொள்ள மனம் ஒப்புவதில்லை.

மறுபடியும் நாம் துன்பங்கள் என்று குறிப்பிட்டவற்றை நினைவு கூறுவோம். குடும்பம், சமூகம் என்னும் இரண்டுக்கும் மேலாக, என் நில, என் பொருள், என் உறவு, என் சுற்றம் என்னும் பற்றைச் சுற்றியே மனம் கொள்ளும் துன்பம் அமைகிறது. இந்தப் பற்று துன்பத்தை பன்மடங்காக்கி மேலும் எந்த வருத்தமோ துக்கமோ வராமல் இருக்க வேண்டும் என்னும் அச்சத்தை சேர்த்தே கொண்டிருக்கிறது.

நான் எனது என்னும் பற்றைப் பற்றிப் பேசும்முன் வேறு ஒரு கேள்வியை எடுத்துக் கொள்வோம். நான் – என் குடும்பம் – என் சுகம், என் துக்கம் – என் செல்வம் என்று போகும் மன ஓட்டம், ஒரு கேள்வியை எப்போது விட்டு விடுகிறது. “நான் இன்னொரு ஜீவனுக்கு ஊறு செய்யாமல் இருக்கிறேனா?”

பேச்சை நிறுத்தி விட்டு நீண்ட நேரம் மௌனமாக இருந்தார் புத்தர். மக்களில் யாருமே அசையவில்லை. அவர்கள் புத்தர் தங்கள் முன் வைக்கும் சிந்தனைகளை உணர்ந்து, புரிந்து கொள்ளும் கவனத்தில் இருந்தார்கள். பனை ஓலைகளின் சத்தம் மட்டுமே அந்த அமைதியில் ஓரே ஒலியாக இருந்தது.

புத்தர் தொடர்ந்தார் ” இந்தப் பனை ஓலைகளின் சத்தம் அதிக இடைவெளி இன்றிக் கேட்டுக் கொண்டே இருப்பது போல, நமது ஆசைகள் நம் மனதில் ஓயாது ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கின்றன. “மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருக்கின்றேனா என்னும் கேள்வியே அந்த ஆர்ப்பரிப்பை மீறி எழுவதில்லை. ஒன்றின் மீது ஆசைப்பட்டதும் அதை அடைவது நியாயமானதே – எனக்கு உரிமையானதே என்னும் எண்ணம் வலுத்து விடுகிறது. தான் – தன் சுகம் – தன் புகழ் – தன் பாதுகாப்பு என்று தனிமனிதனின் தான் ஒரு மையப் புள்ளியாக அமைய ஒரு குறுகிய வட்டத்துக்குள் அவன் தேங்கி விடுகிறான். அந்த வட்டத்தில் என் குடும்பம் – என் குலம்- என் உறவு என்பவற்றுக்கு மட்டுமே இடம் இருக்கிறது. இந்தக் குறுகிய வட்டத்துக்குள் துவங்கும் ஆசை எப்போதுமே எண்ணங்களில் இழையோடுகிறது. மனதளவில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது. எண்ணம் பேச்சாகிறது. ஆசைகளின் தீவிரமும் வலுப்படுகிறது. பின்னர் பேச்சு செயலாகிறது. அது அவரை மட்டுமின்றி அவரை மட்டுமன்றி அவரது சொந்த பந்தங்களையும் சமுதாயத்தையுமே பற்றுக்களில் மேலும் பிணைத்து விடுகிறது. ஒருவரின் ஆசை மனோ, வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களில் ஒரு பிணைப்புச் சங்கிலியையே உருவாக்கி விடுகிறது.

ஒருவருடைய மரணத்தில் கூட இந்தச் சங்கிலி அறுந்து போவதில்லை. அவர் பின்னிய ஆசை வலை – பிறர் பின்னிய ஆசை வலை என வரும் தலைமுறைகளில் பிறக்கும் குழந்தைகளும் இந்த சங்கிலியின் இன்னொரு கண்ணியாக, இவர்களின் இன்னொரு பிறவியாகப் பிறக்கும் குழந்தைகள் வாழ்க்கையைத் துவங்குகின்றனர். தொடங்கும் போதே இந்த மீளா ஆசை வலையில் சிக்கிக் கொண்டு விடுகின்றனர்.

அலை ஓய்ந்து சமுத்திரத்தில் ஸ்னானம் செய்ய இயலுமா? புதை மணல் தனது இயல்பை மாற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியுமா? கண்டிப்பாக சாத்தியம் இல்லை. நோயும் அழுக்குகளும் உடைய உடலை நான் என்றே நம்புகிறது மனம். அந்த உடலின் சுகம் அல்லது வலி குறித்து அலைப்புறுவது போலவே, ஆசைகளை சுமந்து திரிவது தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது.

நெருப்பை ஒரு விளக்குத் திரியைக் கொண்டோ, அடுப்பிலோ மூட்டி நாம் நமது தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்துகிறோம். கவனம் பிசகினால அது நம்மையே அழித்து விடும் என்பதை நாம் நன்கறிவோம்.

ஆசையை உலக நன்மைக்கான ஆசையாக விரிவு படுத்தி, மறுபக்கம் அது நம்மை ஆட்டிப் படைக்காமல் கட்டுப்படுத்தி வாழும் அறநெறி மிகுந்த வாழ்க்கைக்கு பௌத்தம் உங்களை அழைக்கிறது. உடல், மனம், செயல் இவை யாவற்றிலும் பிறருக்கு ஊறு விளைவிக்காத திரிகரண சுத்தியில் நாம் இயங்குவோம். மனித குலம் நன்னெறியோடு வாழ வேண்டும் என்னும் உயர்ந்த லட்சியம், அது நிறைவேறும் என்னும் நன்னம்ப்பிக்கை, அந்த நன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக நாம் முதலில் நன்னெறியில் நிலைத்திருப்பது துவக்கம். தனது தொழிலில் நேர்மையாக், பேச்சில் அன்பை விதைப்பவனாக, தனது நடத்தையில் அப்பழுக்கற்றவனாக, தனது அறிவை உலக நன்மைக்கு மட்டுமே பயன்படுத்துபவனாக ஒருவன் வாழ்வாங்கு வாழ்வதே பூரணமான அடுத்த நிலை. இதை தியானத்தின் மூலம் மனதைக் கட்டுப் படுத்தி அடையலாம். பௌத்தம் ஒரு நல்ல அன்பு மயமான மனித நேயம் மிக்க சமுதாயமாக நாம் எல்லோரும் உயர வழி செய்யும்”

புத்தர் தமது பேச்சை முடித்து வெகு நேரம் ஆகியும் அனைவரும் அவரது ஆணைக்காகக் காத்திருப்பது போல அப்படியே அமர்ந்திருந்தார்கள்.

கலா உதாயின் முதலில் எழுந்து என்னை மன்னியுங்கள். நான் தங்கள் வழியில் பௌத்ததில் இணைகிறேன்” என்று கண்ணீர் மல்கக் கூறி அவரது பாதம் பணிந்தான். புத்தர் அவனை ஆசீர்வதித்தார். பின்னர் சுஜாதாவும் அவளது கணவனும் பௌத்த்ததை ஏற்று அவரை வணங்கினர். பிம்பிசாரர் தமது கிரீடத்தை புத்தரின் பாதத்தில் வைத்து பௌத்தத்தை ஏற்றதும் திரண்டிருந்த அனைவரும் ஒவ்வொருவராக வந்து வணங்கி பௌத்தத்தில் இணைந்தனர்.

பலரும் விடை பெற்றதும் கஸ்ஸாபா சகோதரர்களும் அவர்களது ஊர்க்காரர்களும் சேவகர்களும் மட்டுமே இருந்தனர். இரண்டு இளைஞர்கள் புத்தரை வணங்கினர். ” என் பெயர் சரிபுட்டா. இவன் பெயர் மோகல்லனா. நாங்கள் இருவரும் தங்கள் சீடராகித் துறவைத் தழுவ விரும்புகிறோம்” என்றனர்.

“பௌத்தத்தில் துறவியாக சில நிபந்தனைகள் இருக்கின்றன. சில சபதங்களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்க வேண்டும். பல தேசங்களுக்கும் எனது ஐந்து அரஹந்தர்கள் சென்றிருக்கின்றனர். அவர்கள் வந்த உடன் உங்களுக்கு தீட்சை தரப்படும்”

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , | Leave a comment

குப்பை பொறுக்கிய சிறுவன் NID மாணவராக முடியுமா?


குப்பை பொறுக்கிய சிறுவன் NID மாணவராக முடியுமா?

முடியும் என்று நிரூபித்திருக்கிறார் சஞ்சய் பார்மர் என்னும் அஹமதாபாத் மாணவர். தந்தை ஒரு வாகன ஓட்டுனர். தாயும் இரண்டு சகோதரர்களுமான குடும்பம் கடுமையான வறுமையில் போராடிய போது குப்பை பொறுக்கி அடிப்படைக் கல்விக்குக் கூட வழியில்லாமல் இருந்தார் சஞ்சய். Visamo Kids என்னும் தொண்டு நிறுவனம் இவரைத் தங்கள் காப்பகத்தில் எடுத்துக் கொண்டு 12ம் வகுப்பு வரை படிக்க வைத்தனர். அதன் பிறகு ஒரு தாளாளரின் துணையோடு இவர் National Institute of Design என்னும் இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்புக்கு சேர்ந்துள்ளார்.

இவரது வெற்றிப் பாதையில் இந்தத் தொண்டு நிறுவனம் தவிர பன்வார் ராதோர் என்னும் வடிவமைப்புத் தொழில் வல்லுனரும் துணை நின்றிருக்கிறார். அவர் தான் இவரை National Institute of Design பல்கலைக் கழகத்தின் நுழைவுத் தேர்வுக்கு தயாராக உதவியவர்.

வறிய குடும்பங்களே பெரும்பான்மையானவர்கள். அவர்களில் ஒருவர் மேலே வந்தால் அந்த உதாரணம் மேலும் பல குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நம்பிக்கை அளிக்கும். போராடும் காலத்தில் அடிப்படையான துணை நம்பிக்கை. தன்னம்பிக்கையும் சமுதாயம் கைவிடாது என்னும் நன்னம்பிக்கையும். தொண்டு நிறுவனங்களின் பணிகளில் இது மிகவும் குறிப்பிடத்தக்கது.

ஒரு தனி மனிதனின் வெற்றி தோல்வி தனித்ததான கதை அல்ல. சமுதாயம் எந்த அளவு எல்லாத் தட்டு மக்களையும் உள்ளடக்கி முன்னேற விரும்புகிறது என்பதை கீழ்த்தட்டு மக்களில் வறுமையை வெல்வோர் எத்தனை பேர் என்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். ஆரோக்கியமான சமுதாயம் என்றால் அதன் எல்லா அங்கங்களும் அதாவது எல்லா ஜாதி மற்றும் எல்லா வர்க்க மக்களும் நலமாக இருப்பதை வைத்தே அதன் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்க முடியும்.

ஊடகங்களில் இது போன்ற நல்ல செய்திகள் வரும்போது சமுதாய ஆரோக்கியம் முற்றிலுமாக சீர்குலையவில்லை என்னும் நம்பிக்கை பிறக்கிறது. (News courtesy: TOI)

(Image courtesy:http://visamokids.calorx.org/our_children3.html )

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

உலக வெப்பமயமாதல் மற்றுமொரு எச்சரிக்கை


Co2 emissions.jpg

மின்சார சாதனத்துக்கான பொத்தானை அழுத்துகிறோமோ, இரண்டு , நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்கிறோமோ அல்லது விமானப் பயணமோ ஒவ்வொரு நொடியும் கரியமில வாயு (Carbon dioxide -CO2) காற்றை மாசாக்குகிறது. ஒரு “மில்லியன் “அளவு காற்றில் 400 துகள்கள் என்பதையும் தாண்டி மாசின் அளவு 30 லட்சம் வருடங்களாக இல்லாத அளவு உயர்ந்து விட்டது. Lamont-Doherty Earth Observatory, a unit of Columbia University என்னும் நிறுவன ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு இது.
சீனாதான் உலகிலேயே மாசு படுத்தும் அளவில் அதிகமான நாடு என்று இருந்தாலும் காலங்காலமாக அமெரிக்காவின் மாசு படுத்தும் விதமான வண்டிகள்-உபகரணங்களின் பயன்பாடு மிகவும் அதிகமானதே. இரண்டு நாடுகளுமே ஒரு மில்லியனுக்கு 450 துகள்கள் என்னும் இலக்கிலான கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்க மறுக்கின்றன. தொழில்துறை புரட்சி எனப்படும் தொழிற்சாலைகள் மற்றும் நுகர் பொருட்களின் வளர்ச்சி இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்தது. அதன் பின்விளைவே கடுமையான மாசும் உலக வெப்பமயமாதலும். ஆர்ட்டிக், அண்டார்டிக் இரண்டு துருவங்களிலும் பனிமலைகள் கரைந்து வருகின்றன. வரும் ஆண்டுகளில் கடல் நீர் கடுமையாக அளவில் உயர்ந்து நாடுகளை விழுங்கும் ஆபத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

கரியமில வாயுவின் சதவீதம் .04% தான் மாசாக உள்ளது ; ஏன் கவலைப் பட வேண்டும்? என்று அமெரிக்க நிர்வாகம் கேட்கிறது . மாசு மட்டுமல்ல பிரச்சனை. சிறிய அளவிலானாலும் கரியமில வாயு உலகின் வெப்பத்தைக் கடுமையாக உயர்த்தி விடுகிறது.

மேலை நாடுகளைப் பின்பற்றி நாம் வாகனப் பயணத்தில் மிகவும் சுகம் காண்கிறோம். இரண்டு அல்லது நான் கு சக்கர வாகனத்தில் பயணம் செய்து உடற்பயிற்சிக் கூடம் போகும் வினோதத்தைப் பார்க்கிறோம். நடப்பது என்பது அல்லது சைக்கிள் சவாரி என்பது முற்றிலுமாகக் கைவிடப் பட்டதாக ஆகி விட்டது.

வாழ்க்கை வசதிகள் ஒரு பக்கம் உலக மாசு படுதலுக்கும் மறுபக்கம் உடல் பருமனுக்கும் வழி வகுக்கின்றன. ஒருவர் பயன்படுத்தும் வாகனம் மற்றும் சாதனமே அவரது அந்தஸ்தை நிர்ணயிக்கிறது.

“நாம் இந்த பூமியை முன்னோரிடம் இருந்து வாரிசாகப் பெறவில்லை. நம் பிள்ளைகளிடமிருந்து இரவல் வாங்கியிருக்கிறோம்” என்னும் அருமையான கருத்தின் பொருளை யார் சிந்தித்தாலும் மாசுபடுதலை நிறுத்தக் கண்டிப்பாகக் குரல் கொடுப்பார். (News Courtesy: New York Times) &(Image courtesy: http://www.wikiprogress.org)

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

நம்பிக்கை – மனித நேய நிறுவனம்


550462_164540123686199_1500287557_n

தன் சகோதரன் வித்தியாசமான மனத்திறனுடன் வளர்ந்ததையும் அவர் சமூகத்தால் ஒரு பாரமாகக் கருதப் பட்டதையும் கண்டு மிகுந்த மன வேதனை அடைந்தார் நாகராணி. ஒரு தனியார் பள்ளீயில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த அவர் மனத்திறனில் சவால்களைக் கொண்டுள்ள 40 மாணாக்கரைக் கொண்ட ஒரு சிறப்புப் பள்ளியை இப்போது நடத்துகிறார். நான்கு வயது முதல் முப்பது வயது வரையானவர் இவர்கள். இவர்களில் சிலர் சென்னைத் தெருக்களில் அனாதவாகக் கைவிடப் பட்டவர்கள் ஆவர்.

2003ஆம் ஆண்டு Hope Charitable Trust என்னும் அறக்கட்டளையை நான்கு  குழந்தைகளுடன் துவங்கினார் நாகராணி. மருத்துவமும், தசைப் பயிற்சியும், கல்வியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படுகிறது இந்தப் பள்ளியில். சென்னை அம்பத்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள குழந்தைகளை இந்தப் பள்ளியின் வாகனம் அழைத்து வருகிறது. காகிதப் பைகள் செய்வது, மணிகளைக் கோர்த்து மாலைகள் செய்வது, பரிசுப் பொருட்களை பெட்டிகளாகச் செய்வது என்னும் எளிய பணிகளைச் செய்யும் அளவு மனநலம் சவாலுக்குள்ளானோருக்குப் பயிற்சி தரப் படுகிறது.

இதைத் தவிர விழுப்புரம் திருச்சி போன்ற தொலைவான இடங்களில் இருந்தும் பெற்றோர் வந்து வித்தியாசமான மனத்திறன் கொண்ட தம் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று பயிற்சி எடுத்துக்கொள்ள இந்நிறுவனம் உதவுகிறது. மாநில அரசின் மானிய உதவியும் அம்பத்தூர் மக்களின் ஆதரவும் கொண்டே இந்த நிறுவனம் நடத்தப் படுகிறது. மிகவும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த காலத்தில் துணை நின்றனர் அம்பத்தூர் பகுதி மக்கள் என்று நன்றியுடன் நினைவு கூறுகிறார் நாகராணி.

மனநலம் சவாலான குழந்தைகளை வளர்ப்பது மிகவும் மனச்சோர்வு அ:ளிப்பது தான். ஆனால் நாகராணியை சந்தித்த பின் பெற்றோர் நம்பிக்கையுடன் திரும்பி தம் குழ்ந்தைகளிடம் ஒளிந்திருக்கும் திறன் களை வெளிக்கொணர முயலுகின்றனர். நம்பிக்கை என்னும் பெயரிலான நிறுவனம் தன்னம்பிக்கையை மனநல சவாலை சந்திக்கும் குழதைகளுக்கும் நன்னம்ப்பிகையை அவர்களின் பெற்றோருக்கும் தந்து மனித நேயம் மரிக்காது என்னும் நம்பிக்கையை நமக்குத் தருகிறது. தொடர்பு  எண்: 9841330330. (news courtesy: Deccan Chronicle)

(Image Courtesy: Face Book)

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

ஆயுத எழுத்திலிருந்து அகர முதல எழுத்துக்கு


ஆயுத எழுத்திலிருந்து அகர முதல எழுத்துக்கு

போரினால் மிகவும் பாதிக்கப்படுவது குழந்தைகளும் பெண்களுமே. நீண்ட காலப் போரின் விளைவுகள் அனாதையாக்கப் பட்ட குழந்தைகள், கணவனை இழந்த குடும்பத்தலைவிகள், வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் முற்றிலுமாக இழந்த குடும்பங்கள். போர் நின்றும் மிக நீண்ட காலமாகும் இவர்களது அவல நிலையிலிருந்து இவர்கள் மீண்டு நிலையான வாழ்க்கையைத் தொடங்க.

இலங்கைத் தமிழர்கள் 25 ஆண்டுக்கும் மேலாக ஆயுதப் போரின் பேரழிவால் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள். ஆயுதப் போரின் அவசியம் மற்றும் அரசியல் பற்றி மிகவும் உணர்ச்சிகரமான விவாதங்கள் நிகழ்ந்தன. மனித உரிமைகளை முற்றிலுமாகவே பறிகொடுத்த இலங்கைத் தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய திட்டவட்டமான வரைபடம் எதுவும் இதுவரை உருவாகவில்லை.

ஆயுதப் போரில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஆயுதம் கடத்திக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு வகித்தவர் கே-பி என்று அழைக்கப் படும் குமரன் பத்மனாபன். இன்டர்போல் போன்ற உலக அளவிலான காவல் அமைப்புக்களால் தேடப் பட்டவர். 2009ல் ஆயுதப் போர் முடிவுக்கு வந்ததும் மலேசியாவில் அவர் கைது செய்யப் பட்டு 2012 வரை கொழும்பில் ஒரு வீட்டில் சிறை வைக்கப் பட்டிருந்தார். அவர் 2012ல் விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.

அதை மறுத்த இலங்கை ராணுவம் அவர் தமது தன்னார்வ நிறுவனத்தின் மூலம் கல்விப் பணி மட்டுமே செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளார் என்றும் அவர் இன்னும் விடுதலை ஆகவில்லை என்றும் கூறியுள்ளது. அவர் செய்து வரும் தன்னார்வப் பணி என்ன?

கிளிநொச்சியில் அவர் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். புலம் பெயர்ந்த தமிழர்கள் தரும் நிதியில் பள்ளி நடத்தப் படுகிறது. பெற்றோரையும் உடலில் பல அங்கங்களையும் இழந்தவராக இருக்கும் குழந்தைகள் மனதளவில் மிகவும் காயமும், அவநம்பிக்கையும், பேரச்சமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த எதிர்மறையான தாக்கத்திலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் மீள, கல்வியே சிறந்த வழி என்பது கே-பியின் தீர்மானமான எண்ணம். போர் அழிவையே உண்டாக்கியது என்னும் கழிவிரக்கம் அவரிடம் இருக்கிறது. படிப்பை நிறுத்தியவர்களுக்கும் பள்ளீயில் மாலை நேர வகுப்புகள் நடக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவ ஆட்சிமுறைக்கு விடை கொடுத்து ஜனநாயக ஆட்சியைத் தேர்ந்தெடுத்திருப்பதையே சமீபத்திய தேர்தல் நிரூபித்தது. கே-பியின் மனமாற்றம் காலத்தின் கட்டாயத்தாலோ அனுபவம் கற்றுத் தந்த பாடத்தாலோ – எது காரணமாயிருந்தாலும் இது ஆக்கபூர்வமான பணியே.

ழந்த உரிமைகளை மீட்டுக் கொண்டு தலை நிமிர அரசியல் நடவடிக்கைகளை விடப் பயனளிக்கும் ஆயுதம் வேறு இல்லை என்பது வரலாறு. போராடி வெல்ல கல்வியை விடச் சிறந்த துணையும் பலமும் வேறு இல்லை.  ஆயுத எழுத்திலிருந்து அகரமுதல எழுத்துக்கு மாறி இருக்கும் சூழ்நிலை நம்பிக்கை தருவதாகும். 

(Image Courtesy:lankanewsweb.com) & (News Courtesy: The Hindu)

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment