முதலை – My friend the Crocodile திரைப்படம் – குழந்தைகள் காண வேண்டிய படம்
மக்கள் தொலைக்காட்சியின் நேற்று முதலை என்னும் தமிழ்ப் படத்தைப் பார்த்து மிகவும் வியந்தேன். சுற்றுச் சூழலை நேசிக்கும், பல்வேறு உயிரினங்களை நேசிக்கும் ஒரு சிறுவனை மையப்படுத்தி மிகவும் இயல்பாக எடுக்கப்பட்ட அருமையான படம். 1988 வந்த இந்தப் படம் இப்போது தான் காணக் கிடைத்தது.
ஒரு புயலின் போது கடலை ஒட்டிய கிராமம் ஒன்றுக்கு ஒரு பெண் முதலை வந்து சேருகிறது. சினையாக இருக்கும் அந்த முதலையுடன் அந்தக் கிராமத்துச் சிறுவன் ஒருவன் நட்புக் கொள்கிறான். முதலையைக் கொல்ல கிராமத்தில் சிலர் முடிவு செய்து முயலும் போது அவனும் அவன் சகோதரியும் மற்றொரு சிறுவனும் சேர்ந்து காப்பாற்றி கடலில் விட்டு விடுகிறார்கள்.
Romulus Whitaker படத்தின் இயக்குனர் இவர் சென்னை அருகே முதலைப்பண்ணை அமைத்து நடத்தி வந்தவர். இந்தப் படத்தின் சிறப்பு அம்சம் சிறிதும் அச்சமில்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் சிறுவன். அவன் பாம்புக் குட்டிகள் முட்டையில் இருந்து வெளியே வரும் போது படம் எடுப்பதைப் பார்த்து அதிசயிக்கிறான்.பாம்பைக் கொல்லாதீர்கள் என்று நண்பர்களைத் தடுக்கிறான். காட்டுப் பல்லியைத் தேடி அதன் தோலில் உள்ள ஆழ்ந்த பழுப்பு நிறத் தோற்றத்தை ரசிக்கிறான். முதலை அருகே படுத்து உறங்குகிறான். இரவில் அது முட்டையிடுவதைக் காண்பதற்காக காட்டுக்குள் வருகிறான். மணலில் அது மூடி வைத்த முட்டைகளை உடும்பு போன்ற ஒரு விலங்கு தோண்டி எடுத்து விழுங்கி விடும் போது கண்ணீர் சிந்துகிறான். தூண்டில் போட்டு மீன் களைப் பிடித்து முதலைக்குக் கொடுக்கிறான். சிறுவனும் முதலையும் ஒன்றாய் இருக்கும் காட்சிகளில் நமக்குத்தான் அச்சமாக இருக்கிறது. ஒன்றே முக்கால் மணி நேரம் அந்தச் சிறுவன் நம்மை வேறு உலகத்துக்கே அழைத்துச் செல்கிறான். படம் குறைந்த எடிட்டிங்கில் கிட்டத்தட்ட நேரில் பார்க்கிற மாதிரி எடுக்கப் பட்டிருக்கிறது. நடித்தவர்கள் மீனவர்கள், பழங்குடியினர் தொழில் முறை நடிகர்கள் அல்லர். 1989ல் உலகக் குழந்தைகள் திரைப்பட விழாவில் விருது பெற்ற இந்தப் படம் Dost Magarmachh எனும் ஹிந்தி வடிவத்திலும் வந்திருக்கிறது.
இயற்கையை, வன விலங்குகளை நேசிக்கும் மனப்பாங்கை குழந்தைகளிடம் விதைக்க இந்தப் படம் உதவும். பெற்றோர் இணையத்தில் தேடி இதைக் குழந்தைகளைப் பார்க்க வைக்கலாம்.
கிராமப்புற மக்களின் மனித நேயத்தை மிகவும் அழகான முறையில் வெளிப்படுத்திய படம்….