‘வாசிப்போம் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல் குழுவில் விமர்சித்த சரவணன் சுப்ரமணியன் அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பூமராங்
சத்யானந்தன்
எழுத்து பிரசுரம்
176 பக்கங்கள்’
வாசிப்போம்-தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல் குழுவில் பதிவுகள் எழுதியமைக்காக பரிசாக அளிக்கப்பட்ட நூல் இது. வாசிக்காத படைப்புகளை, எழுத்தாளர்களை முன்முடிவின்றி நேர்மறையாக அணுகுவது மிகவும் சிரமமாகவே உள்ளது. சுஜாதாவை நினைவூட்டும் மிகக் கச்சிதமான ஆங்கில உரையாடல்கள், சமகால நிகழ்வுகளின் பகடிகள், இணையத்தின் அதீத பயன்பாடுகள் குறித்த தகவல்கள் இந்நாவலின் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள். 30 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் பயின்ற உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு இடைவேளைகளில் மரத்தடியில் அமர்ந்து சிறு சிறு குழுக்களாக உணவு உண்பது வழக்கம். இடைவேளைக்கு முன்பாகவே பெரும்பாலும் சிலரது உணவு டப்பாக்கள் பசிமிகுந்த மாணவர்களால் காலி செய்யப்பட்டு விடுவதும் உண்டு. உணவருந்திய பின் வயல்வெளிகள் சூழ்ந்த அவ்விடத்தில் பாத்திரங்கள் கழுவ சில கிணறுகளையும், குடிநீருக்காக சில கிணறுகளையும் தேர்வு செய்து வைத்திருப்போம். குடிநீர் கிணறுகளில் ஒன்றுக்கு ‘தேங்காய் தண்ணீர் கிணறு’ என்றும் பெயருண்டு. அவ்வளவு சுவையான நீர் அங்கு கிடைக்கும். குடிநீர் வணிக மயமாகிவிட்டமை குறித்த வரிகளை இந்நூலில் வாசித்தபோது நினைவுக்கு வந்தவை மேற்கண்ட வரிகள். இணையத்தில் அறிவிக்கப்படும் போட்டிகள், பரிசுகள், பேராசைகளைத் தூண்டுவதும், முழுமையான வணிகச் செயல்பாடுகள் அவற்றுக்கான பின்புலமாக இருப்பதும் உலகமயமாக்கலின் மற்றுமொரு விரும்பத்தகாத விளைவுகளில் ஒன்று. மூட நம்பிக்கைகளை கேலி செய்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் எல்லாம் சரிதான். ஜோசியக்காரர் ஒருவரை பொதுவெளியில் இழிவுபடுத்துவது போன்ற வரிகள் ஏற்புடையதாக இல்லை. மாற்றுக் கருத்துக்களுக்கான தளங்கள் மறுக்கப்பட வேண்டியவை அல்ல. விவாதிக்கப்பட வேண்டியவை. விரும்பத்தகாதவை புறக்கணிப்புகளின் ஊடாகவே விலகிச் செல்ல அனுமதித்தல் நன்று. பெருந்தொற்று காலத்தில் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் இதுபோன்ற சூழல்களில் வாசிப்புகளை ஊக்குவிப்பதும், படைப்புகளை நேரடியாக வாசகர்களுக்கு அனுப்பி வைப்பதும் பாராட்டுக்குரியவை. எழுத்தாளர் சத்யானந்தனுக்கும், ‘வாசிப்போம்-தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ குழுவிற்கும் மனமார்ந்த நன்றியும்! அன்பும்!!