தடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை


Image result for adhavan deetchanya images

தடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை

” காமிய தேசத்தில் ஒரு நாள் ” என்னும் ஆதவனின் சிறுகதை மிகவும் வித்தியாசமானது. அது ஒரு அறிவியல் புனைவு என்றே நாம் சொல்லி விடலாம். ஆனால் அறிவியல் குறைவு. சமகால அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை  அங்கதத்துடன்  நம் முன் பகிர்வது அதிகம்.

எந்த மதத்தினர் எவ்வளவு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி , குடிமகன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் அரசாங்கமே முடிவு செய்வது மட்டுமல்ல, அவர்களைக் கண்காணிக்கவும் செய்கிறது. இந்த அவலம் மிகவும் அங்கதத்துடன் தொழில்நுட்பச் செயல்பாட்டை அங்கதத்துடன் பயன்படுத்துகிறது கதை.

சற்றே பகீர் என்னுமளவு இருப்பதும் ஒரு தலைப் பட்சமாக இருப்பதும் இதன் குறைகள். இதில் அவர் கற்பனை செய்துள்ள சில கட்டுப்பாடுகள் சீனாவிலும் பிற கம்யூனிச நாடுகளிலும் பரீட்சித்துப் பார்க்கப் பட்டவை.  இருப்பினும் இன்றைய பண்பாட்டுக்கு காவலர்களின் எழுச்சியை கடுமையாய் விமர்சிப்பதால் இது ஒரு மைல் கல்லான கதை.

முதலில் ஆதவன் தீட்சண்யா மற்றும் (சிறுபான்மையாகி விட்ட ) சிந்தனையாளர்கள் எதை பற்றிக் கவலைப் படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு மூளைச் சலவை ஆர் எஸ் எஸ் மற்றும் வலது சாரியான சங்க பரிவார் அமைப்புக்கள் நடத்தி வருகின்றன. ஓரளவு வெற்றியும் கண்டு விட்டார்கள். அவர்களது திட்டம் பண்பாட்டையும் , தேச பக்தியையும் ஒன்றாய்ப் போட்டுக் குழப்புவது ஆகும். இதனால் தான் இந்த 50 ஆண்டுகளில் பசு மாமிச பிரச்னையை கிண்டி விட்டு, அதற்கு அவ்வப்போது உயிர் கொடுக்கிறார்கள். பசுவை நேசிக்கும் பண்பாட்டின் அடிப்படையிலான, இந்துத்துவ சிந்தனையின் அடிப்படையிலான தேச பக்தி. மிகவும் சோகமான நிகழ்வு ஊழல்வாதிகளை எப்படியாவது நிறுத்தினால் போதும் என்னுமளவு சென்ற மக்களவைத் தேர்தலுக்கு முன் ஆயிரம் கோடிகள், லட்சம் கோடிகள் என்னும் அளவு ஊழல் கொடிகட்டிப் பறந்தது.

அந்த மனச் சோர்வால் கை சுத்தம் மட்டுமே பார்த்தே மக்கள் இந்த முடிவை எடுத்து இந்த அரசையும் தேர்ந்தெடுத்தார்கள். இன்று தேசத்தின் பன்முகத்தன்மைக்கும், மற்றும் தேசத்தின் கருத்துச் சுதந்திரத்துக்கும் பெரிய அளவில் ஒரு சவால் வந்து விட்டது. இதை எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் மட்டுமே எதிர்க்க முடியும்.

இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ‘பண்பாட்டு அடிப்படையிலான தேசபக்திக்கு ‘ மாற்றான உண்மையான தேசபக்தி எது என்பதை எடுத்துக் காட்டாத தவறி விட்டார்கள். இப்போதும் தாமதமில்லை. அவர்கள் எது தேச பக்தி என்பதில் தெளிவு பெற வேண்டும் என்பதால் கீழே தருகிறேன் :

1.தனது தாய் நாட்டின் தனித் தன்மைகள், அதன் வெவேறு இன – மதமான பண்பாட்டின் சிறப்புக்கள் இவற்றை முதலில் ஒரு தனி மனிதனோ அல்லது இயக்கமோ புரிந்து அதன் மீது மரியாதையும் வைத்திருக்க வேண்டும். மறுபக்கம் அதன் தேங்கிப் போன மூட நம்பிக்கைகள் மற்றும் வெறுப்பு விதைக்கும் போக்குகள் எதுவானாலும் அதைக் களைந்து தன் நாடு சரியான திசையில் செல்ல அவன் உழைக்க வேண்டும்.

2. நம் நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாம் காட்டும் அக்கறைதான் தேச பக்தி. அவர்களுக்கு அது ஊழலின்றிப் போய்ச சேருவதுதான் தேசபக்தனின் முதல் இலக்கு. இதற்குப் பிறகு தான் அவன் கலைகள், விளையாட்டுக்கள் மற்றும் உலக நாடுகள் வியக்கும் விஞ்ஞான வளர்ச்சி எல்லாமும் பற்றி அக்கறை கொள்ள வேண்டும்.

3. தேசம் என்பதும் தேச பக்தி என்பதும் தாத்தாக்களின் – மன்னர்களின் புகழ் பாடி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது அல்ல.

4. பெண்கள் , வறியோர் , குலத்தால் தாழ்ந்தவர் என இழிக்கப்பட்டோர் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எல்லாக் காலத்திலும் சம நீதி கிடைக்கவே இல்லை. இனி அது கிடைக்கப் பாடுபட வருவோர் மட்டுமே தேச பக்தர்கள்.

5. நம் தேசம் என்றால் நம் அனைவருக்கும் முன்னேற்றமும் நம் அனைவருக்கும் கருத்துக் சுதந்திரமும் , பெரும்பான்மையினரின் பெருங்கூச்சல் மட்டுமே இல்லாமல் , எல்லோரின் குரலுக்கும் சம இடம் என்னும் கனவும் ஆன ஒரு தேசம்.

6.பண்பாடு என்பது நம் உடல் போன்றது. உள்ளே உள்ள நோயும் குறையும் வெளியே தெரியாது. அவ்வளவே. நம் உடலை எப்படிப் பார்த்துக் கொள்கிறோமோ அந்த அளவு நோய் பிடித்த பண்பாட்டையும் சரி செய்ய வேண்டும். அந்த திசையில் செல்வது தேச பக்தி.

7. இந்த விதி எல்லாப் பண்பாட்டுக்களுக்கும் மதங்களுக்கும் பொருந்தும். ஆனால் அது விவாதங்களின் வழியே, அந்த அந்த மதத்தினரின் விழிப்புணர்வு வழியே நடக்க வேண்டும். எல்லா மதத்தின் நடுநிலையாளர்களும் இதற்காக ஓன்று பட வேண்டும். இதைச் சொல்வது, இந்தக் கனவைக் காண்பது தேச பக்தி.

8. இவ்வாறு நம் மண்ணின் எல்லா மக்களும் எல்லா வழிகளிலும் முன்னேற உழைப்பது தேச பக்தி.

9. வெறுப்பும் பெரும்பான்மைப் பண்பாட்டைத் தூக்கிப் பிடிக்கும் எதிர்மறை முயற்சியும் தேச பக்தி அல்ல.

இந்தத் தெளிவு வந்து ஒட்டு வங்கிகளை மறந்து இடதுசாரிகள் மற்றும் காங்கிரசின் சுயசிந்தனையாளர்கள் நாடு உருப்பட, விவாதங்களை முன்னெடுத்தால் கண்டிப்பாக இன்றைய காட்டு தர்பார் கட்டுக்குள் வரும்.

ஆதவன் தீட்சண்யாவின் கதை ஒரு தலைப் பட்சமானது என்று குறிப்பிட்டேன். அது என்ன என்பதைக் குறித்தான் இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய வேண்டும்.

எந்த அடிப்படையில் நாம் இன்று இங்கே இப்போதுள்ள அரசு மட்டுமே இந்த அளவு ஒரு கலாச்சாரப் படையின் கை ஓங்கக் காரணம்  என்று தீர்ப்பளிக்கிறோம் ? இதை  நாம் முதலில் சுயவிமர்சனம் செய்து பார்க்க வேண்டும். யார் அரசாக இருந்தாலும் இந்தப் படை ஓயாது ஒரு தவறான தேச பக்தியின் மாதிரி ஒன்றை விற்றுக் கொண்டு தான் இருந்தது.

எனவே,  அரசியல் ரீதியான சார்புகளைத் தாண்டி நம் சமூகத்தில் ஏன் இது விலை போகிறது என்னும் சுயவிமர்சனம் செய்ய வேண்டும்.

ஜாதிவெறி உள்ளவனின் மதவெறியைத் தூண்டுவது எளிது. பெண்ணடிமை செய்பவனிடம் “வா. சிறுபான்மையினரை ஒரு வழி செய்வோம் ” என அழைப்பது , அவனை வரவழைத்துக் காட்டுவது எளிது. குடும்பங்களுக்குள் கருத்துச் சுதந்திரம் இல்லை. அதுவே பண்பாடு என ஒரு மரத்துப்போன சமுதாயம் நம்புகிறது. நாட்டுக்கும் அதே தான் என்போர் குரல் எடுபடுகிறது. ராஜாராம் மோகன்ராய் முதல் கல்புர்கி வரை சீர்திருத்தவாதிகள் எல்லாக் காலத்திலும் இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு மேடை இல்லை. அவர்கள் அமைப்பு சாராமல் இயங்கினாலும் அரவணைக்கும் அக்கறை நமக்கு இல்லை. இடதுசாரி அல்லாத சமநிலை உள்ள யாரையும் மையப்படுத்தி விவாதங்களை இடதுசாரிகள் துவக்கவே இல்லை. இன்று தெளிவும் நாட்டின் பெரும்பான்மை ஏழைகளுக்காக உழைக்கும் லட்சியமும் எஞ்சி இருப்பது இடதுசாரிகளிடமே. சரியான தேசபக்தி சுயவிமர்சனம் செய்யும் சமூகத்தில் இருந்தே துவங்கும் என்பதை அவர்கள் மக்களிடம் எடுத்த்துச் செல்ல வேண்டும்.

மக்களில் ஒவ்வொரு மதத்திலும் மத நல்லிணக்கம் உள்ளவர்களை ஓன்று சேர்த்தாலே போதும். பண்பாட்டுக் காவலர்கள் பற்றி சில கேள்விகளை எல்லோரிடமும் கேட்கலாம்

மருத்துவ வசதி இல்லாத சிற்றூர் கிராமங்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்?
தண்ணீர் வசதி இல்லாத இடங்களில் இவர்கள் பணி என்ன?
பள்ளிக்கூடங்கள் இல்லாத – ஆசிரியர் இல்லாத கிராமங்களில் இவர்கள் சேவை உண்டா ?
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு இவர்கள் தரப்பில் என்ன உதவிகள் நடந்தன?
உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் உருவாக இவர்கள் முயற்சித்தார்களா?

மதம் தாண்டி மனிதம் நோக்கி சமூகத்தைத் திருப்பும் பொறுப்பு எல்லாச் சிந்தனையாளர்களுக்கும் உண்டு.

ஆதவன் தீட்சண்யாவின் கதை கூர்மையானது. இலக்கைத் தாக்கியது. பாராட்டுகள்.

 

 

 

 

(image courtesy:poetryinternationalweb.net)

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை, விமர்சனம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a comment