காந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை
சுவாமி சகஜானந்தர் என்னும் துறவி நந்தனார் மடம் என்னும் மடத்தை நிறுவி, அதன் கீழ், கல்விக்கான பள்ளிக் கூடத்தை நடத்தினார், சிதம்பரத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு, காந்தியடிகள் இருமுறை வந்தார் என்பவற்றை ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். அதற்கான இணைப்பு இது.
பெசன்ட் நகரில் ஆல்காட் என்னும் ஆங்கிலேயர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பள்ளியைத் துவங்கினார். அவர் துவங்கிய கால கட்டத்தில் தலித்துக்கள் கல்வி என்பது வெளிப்படையாய் எதிர்க்கப் படும் அளவு மக்கள் ஜாதி வெறியில் கேள்வி கேட்பார் இல்லாமல் மூழ்கி இருந்த காலம். கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் சிதம்பரத்தில் சகஜானந்தர் பள்ளி துவங்கி எல்லா வகுப்பினரும் கல்வி கற்கும் வழி செய்கிறார். அந்தக் கால கட்டம் பற்றிய ஸ்டாலின் ராஜாங்கத்தின் பதிவு முக்கியமானது. அது கீழே :
——————————————-
சகஜானந்தர் பணியின் முக்கியத்துவத்தை அவர் காலத்தின் பின்னணியில் பொருத்திப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். மிஷனரி பள்ளிகள், பஞ்சமர் பள்ளிகள், தலித் முன்னோடிகள் தொடங்கியிருந்த சில பள்ளிகள் என்று மிகச் சிறிய அளவிலேயே ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி வாய்ப்புகள் இருந்தன. 1916-ல் தொடங்கப்பட்ட தொழிலாளர் நலத் துறை, இம்மக்களுக்கான கல்வி தொடர்பாக யோசிக்கத் தொடங்கியிருந்த தருணம். அதுவும் சென்னை போன்ற நகரங்களை ஒட்டியதாகவே இருந்தது. இந்நிலையில்தான், சகஜானந்தரின் பணி கிராமங்களைச் சார்ந்து எளிய மக்களிடம் தொடங்கியது.
———————————————-
சுமார் ஒரு வருடம் நான் கடலூரில் பணி புரிந்தேன். அப்போது என்னால் தென் ஆற்காடு எந்த அளவு பின் தங்கி இருக்கிறது என்பதைக் கண் கூடாகக் காண இயன்றது. இன்று கூடப் பிற மாவட்டங்களை ஒப்பிட, கடலூர், வடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் பகுதிகள் பின் தங்கியவையே. கல்வியும் மருத்துவ வசதியும் பெருகினால் மட்டுமே ஒரு பகுதி முன்னேற இயலும். சகஜானந்தர் பற்றி நம்முடன் பகிர்ந்த ஸ்டாலின் ராஜாங்கம் மற்றும் ஹிந்து நாளிதழுக்கு நன்றி.
(image courtesy: tamil.thehindu.com)