இலவசமா? மேம்பட்ட வருமானமும் வாழ்க்கைத் தரமுமா?


indian-poverty

இலவசமா? மேம்பட்ட வருமானமும் வாழ்க்கைத் தரமுமா?

“ஒரு ஏழைக்கு ஒரு மீனைக் கொடுத்தால் ஒரு வேளைப் பசி தீரும். அவருக்கே மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அவருக்கு நிரந்தர உணவுக்கான வழியை அவரே தேடிக் கொள்வார்” என்பது அனைவரும் அறிந்த ஒரு ஆழ்ந்த பொருளுள்ள பழமொழி.

ஒவ்வொரு மாநிலத்திலும் சிறிதும் பெரிதுமாக இருந்த இலவசம் இப்போது தேசிய அளவில் செய்யப் பட இருக்கிறது. உணவுக்கான தானியத்தை சேமிக்க முடியாமல் பல முறை அவை வீணடிக்கப் பட்டதும் நம் நாட்டில் தான். உணவுப் பொருளை மிகவும் பெருவாரியான மக்களுக்கு இலவசமாகத் தருவது ஒரு பழக்கமாவதால் அவர்கள் பிற தேவைகளுக்கான வருமானத்துக்கு என்ன வழி என்னும் கேள்வியே எழாமலும் போகலாம்.

பஞ்ச காலத்தில் வெள்ளத்துக்குப் பின், நிலச்சரிவு, புயல், சுனாமி போன்ற வேளைகளில் கண்டிப்பாக இலவசமாக உணவு வினியோகம் மேற்கொள்ள வேண்டியது தான். ஆனால் நிரந்தரமாக அரசு செலவில் உணவுப் பொருளுக்கான தானியம் இலவசம் என்பதன் மறுபக்கம் மக்களின் வேலை வாய்பைப் பெருக்கும் துறைகளில் அரசு முதலீடு குறையும் என்பது. இது நீண்ட கால நோக்கில் ஆரோக்கியமானதே அல்ல.

இந்தியப் பொருளாதாரம் மட்டுமல்ல வளரும் நாடு எதையும் நோக்கினால் விவசாயத்துக்கு மாற்றான வருவாய் தரும் தொழில் வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதையே நாம் காண முடியும். விவசாயம் வருடம் முழுவதும் நடத்த முடியாதது. மழை பொய்க்கும் போது விவசாயம் நின்று விடும். பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது கிராமப் புறங்களீல் விவசாயத்துக்கு மாற்றான ஒரு தொழிலை அரசு முன்னெடுத்துச் செல்லாததே.

பிளாஸ்டிக்கின் கெடுதல் குறித்து அரசு பிரசாரத்தைக் காண முடியும். மாற்றாக பனைஓலைக் கூடைகள் அல்லது சணல் பைகள் எந்த அளவு அரசினால் கொள் முதல் செய்யப்பட்டு கிராமப் புற மக்களுக்கு ஒரு புதிய தொழில் கிடைத்தது? ஏற்றுமதியாகக் கூடிய இத்தகைய பசுமைப் பொருட்கள் எந்த அளவு ஊக்குவிக்கப் பட்டன?

பனை என்று எடுத்துக் கொண்டால் வெல்லம், ஓலைப் பொருட்கள் என இரண்டு வகைத் தொழில்களுக்கு வாய்ப்பு உண்டு. சணலில் கயிறு, பைகள், குளிராடைகள், கால் தடுக்குகள் எனப் பல தொழில்களுக்கு வாய்ப்புண்டு. திறமையான கலை நயம் உள்ள வேலைப்பாடு மிகுந்த துண்டுகள் அல்லது சால்வைகளை நாம் ஊக்குவித்தோமா?
இந்தியாவில் சுற்றுலா என்பது பெரிதும் ஆன்மீகப் பயணமே. வழிபாட்டுத் தலங்களோ அல்லது மலைவாசத் தலங்களோ எந்த அளவு நாம் சுற்றுலாவைப் பெரிய அளவு விஸ்தரித்தோம்?

இந்த இடத்தில் ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். திருச்சியில் காவிரி காய்ந்து கிடக்கும் மே, ஜூன் மாதங்களில் “சம்மர் பீச்” என்று ஒரு 500 சதுர மீட்டருக்கு விளக்கு அமைத்து ஒரு மணற்பரப்பு காவிரிப் பாலத்துக்கு அருகே உருவாக்கப் பட்டது. சிறு கலைஞர்களின் நிகழ்ச்சிகள் மட்டுமே தென்பட்டன. தள்ளுவண்டி உணவுக்கடைகள். ஆனால் மக்களின் வரவேற்பு அபாராமாக இருந்தது. காவல் துறை நல்ல ஒத்துழைப்புத்தர அரசுக்கு செலவு ஒன்றுமே இல்லாமல் இது திருச்சியின் பெரிய கொண்டாட்டமாக இருந்தது. சுற்றுலாவுக்கு நாடு முழுதும் அரசின் முறையான ஆதரவு இருந்தால் பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

மக்களைக் கவருவது என்பதும் அவர்கள் நல வாழ்வுக்கு வழி வகுப்பது என்பதும் எதிர் எதிர் திசைகளில் செல்பவையாகும்.

(image courtesy:www.celsias.co.nz)

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a comment