தேவை நடமாடும் வங்கியே- பெண்கள் நடத்தும் வங்கி அல்ல
பல கிராமங்களில் முதலில் வங்கியே இருக்காது. சரி, மக்களுக்காவது வங்கிகளில் சென்று என்னென்ன சேவைகள் பெறலாம் என்று கேட்டால் அவர்களுக்கு அது பற்றி எதுவுமே தெரிந்திருக்காது. வங்கி ஊழியர் தவிர நகர்ப்புற மக்களுக்கே, வங்கி சேவைகள் பற்றிய முழு அறிவு இருக்காது. பல அடகுக்கடைக்காரர்களும், கந்து வட்டி வசூல் செய்வோரும் நகர்ப்புற ஏழைகளிடமும், கிராமப்புறத்திலும் மிகவும் செல்வாக்குப் பெறுவதன் காரணம் வங்கிகள் நகரங்களில் நிலையாக அமர்ந்து நகர்ப்புறத்தில் படித்த மக்களுக்கு மட்டும் பயன் பட்டு வருவதால் தான். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா என்னும் பொதுத் துறை வங்கி பெயரளவில் இந்த சேவையைத் துவக்கியதோடு சரி. முழுவீச்சில் அவர்களே அதை இயக்கவில்லை. மற்ற அரசு வங்கிகள் தொடங்கவே இல்லை.
இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பெண்களாலேயே இயக்கப்படும் புது வங்கி தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பது தேவையற்ற ஒன்று. பெண்களின் ஓட்டுகளை எண்ணத்தில் கொண்டு செய்திருந்தாலும் அசட்டுத்தனமான ஒன்று.
கிராமப்புறங்களில் இருந்து வாரம் ஒருமுறையாவது ஒரு நகை அடகுக்காரர் தலைமறைவு என்னும் செய்தி வந்து கொண்டே இருக்கிறது. நல்ல வட்டி தருவதாகச் சொல்லி வைப்பு நிதி போல வசூல் செய்யும் சிறிய நிதி நிறுவனங்கள் காணாமற் போவதும் அடிக்கடி வரும் செய்திதான்.
வங்கிகள் நடமாடும் வங்கி சேவையைத் துவக்கும் பட்சத்தில் அதில் ஒரு ரூபாயைக்கூட எடுத்துச் செல்ல வேண்டாம். எந்த வங்கிப் பணியும் கூட அந்த வண்டியில் செய்ய வேண்டாம். ஆனால் என்னென்ன சேவைகள் கிடைக்கும். எந்த ஊரில் எந்தத் தெருவில் வங்கிக் கிளை உள்ளது என்னும் விளம்பரத்தைக் கொடுக்கட்டும். மிகப் பெரிய தொகை வைப்பு அல்லது மிகப் பெரிய கடன் (உத்தரவாதத்துடன்) வருகிறது என்றால் வங்கி அதிகாரிகள் பிறகு நேரில் சென்று கொள்ளலாம். நடமாடும் வங்கியின் வண்டியில் இருந்து வங்கி அதிகாரிகளுடன் தொலை பேசியில் பேசும் வசதி வைக்கலாம். வங்கியின் எல்லா சேவை விவரங்களுக்கான படிவங்களை வினியோகம் செய்தாலே போதும். அரசு வங்கிகளுக்கு வருவாயும் வியாபாரமும் பெருகும். கிராமப்புற மக்களுக்கு அரசின் நலத் திட்ட வங்கி சேவைகள் சென்று சேரும். அவர்களை புற்றீசல் போன்ற தனியார் நிதி அமைப்புக்கள் ஏமாற்றுவது நிற்கும்.
தேவை பெண்கள் வங்கி அல்ல. கிராமப்புறப் பெண்களுக்கும் வங்கி வசதி.
(image courtesy:http://iseeindia.com)